சனி, 26 நவம்பர், 2016

                                                        எல்லைப்புறத்தில்
                                                   ஓர் 

                                         இதயத்தின் குரல்.

             கர்னல் பா .கணேசன்  சுமார் பத்து  புத்தகங்கள் எழுதியுள்ளார் .மேலே குறிப்பிட்டுள்ளது அவரது நூல்களில் ஒன்று.
                  பொதுப்பணித்துறை அதிகாரியாகப் பணியாற்றிக்கொண்டிருந்த அவர் ஒரு விபத்து போல இராணுவ அதிகாரியானார்.அவரது உடலளவிலும் மனத்தலளவிலும் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் அது எப்படி நிலை நிறுத்தப்பட்டது போன்ற அனுபவங்கள் நிறைந்தது அந்த நூல்.

                           அந்த  நூலுக்கு வாழ்த்துரை  இது.

               விருப்பு வெறுப்பற்ற ஒரு சாத்தியத்தேடல்
                        டாக்டர். வெ .ஜீவானந்தம்.B.Sc.M.B.B.S,DA
                                           தலைவர் தமிழக பசுமை இயக்கம்
                                           படிகள் படிப்பியக்கம் .
                          45.பி.கலைமகள் கல்வி நிலையம் சாலை
                                             ஈரோடு ,638001.

                     கர்னலின் நூலுக்கு வாழ்த்துரை எழுத முனையும்போது எனக்கு சற்றே  தயக்கம் ஏற்பட்டது.இராணுவம்,போர் வீரம்,வெற்றி பற்றியெல்லாம் என் பார்வை சற்றே வேறுபட்டது.எனவே இராணுவ வீரரின் நூலுக்கு நாம் எப்படி என்ன எழுதுவது என்ற தயக்கத்துடனே தான் படித்தேன்.நான் செய்ய நினைத்திருந்த விமரிசனத்தில் பெரும் பகுதியை ஆசிரியரே செய்ததில் எனக்கு நிம்மதி ஏற்பட்டது.
                  உலகின் மிகப்பெரிய   யுத்த பூமி நம்முள் இருக்கும் குருஷேத்திரமே .அதனால்தான்  போரிடு என்று அர்ச்சுனனை  ஆற்றுப்படுத்திய பகவத் கீதையை அண்ணல் காந்தி அஹிம்சை நூல் என்கிறார்.
                  உடமை வெறியும் ஆதிக்க வெறியும் உதிக்கும் ஒவ்வோர் இடத்திலும் போரும்  வன்முறையும் தவிர்க்க முடியாததாகிவிடுகின்றன.
                 எளிய கிராமிய குடும்பத்தில் பிறந்த கணேசன் கர்னலாகிறார்.



ஆனால் அடிநிலை சிப்பாய்களாகச்சேருவோர் நிலையோ பரிதாபம் என்று வருந்துகிறார்.தேசபக்தி,தேசபக்தி என்று முழங்கும் அரசியல் தலைவர்களின் படிக்காதப்  பிள்ளைகூட சிப்பாய்யாவதில்லை .வசதியற்ற ஏழைகள் பிழைப்புக்காக தம் உயிரை விலை பேசுவதாகவே அது உள்ளது என்ற உண்மையைக் காட்டுகிறார்.
                       இராணுவ வீரனும் மனிதனே.போர் அறிவிக்கப்படும்போது எல்லோருக்கும் உண்டாகும் மனப்போராட்டம் ,வேதனை,துயரம் போலவேதான் அவனுக்கும் நேர்கின்றன.வீரம்,தேசபக்தி,தியாகம் என்பனவற்றை சாதாரண மனித உணர்வுகள் வெல்லும் உண்மையை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

Image result for 1965 war


                      வரலாற்றில் சில கடிதங்கள் மறக்கமுடியாத இலக்கியமாகிவிடுகின்றன.நேரு தன்  மகளுக்கு எழுதிய கடிதம் இன்றைய தலைமுறைக்கும் உலக வரலாற்றைக் கூறும் இலக்கியமாக்கத்திகழ்கின்றன.கர்னல் கணேசனின் இந்த நூல்  பல கடிதங்களின் கோவை.இராணுவ வாழ்க்கையின் பலகூறுகளை  இது வெளிப்படுத்துகிறது.
                    தனிமனிதனின் அனுபவங்கள் சுயத்தை மிஞ்சிக்கடந்து உலகு தழுவிய பார்வை பெறும்போது அவை வலிமைபெறுகின்றன.
                     அண்மைவரைக்கூட சென்னை நகரத்தின் மையத்தில் லட்சக்கணக்கான மக்களால் தினம் தினம் பார்க்கப்பட்டு ,கடந்து செல்லப்பட்ட மத்திய சிறைச்சாலை இருந்தது.அது இடித்துத் தகர்க்கப்படும் முன்  மக்களுக்காகத் திறந்து விடப்பட்டது.அதை பார்வையிட்டபோது ஒரு பாமரனின் மனம் எப்படியிருக்குமோ அப்படி கர்னலின் இராணுவப்பணி பற்றிய ஒளிவு மறைவற்ற படப்பிடிப்பைக் கண்டபோது எனக்குத்தோன்றியது.
                   இராணுவப் பணியைத்  தேர்ந்தெடுத்த காலம் தொட்டுப் புதிய பயிற்சிகள் பெற்று ,பதவி உயர்வுகள் பெற்று,போர்க்களத்தில் வீர சாகசம் புரிந்து,ஜனாதிபதியின் விருது பெற்று,ஒவ்வொரு நிலைகளிலும் தன்  சிறப்பைத் தான் மட்டுமே கண்டு,உணர்ந்து,மகிழ்ந்தாலும் உடன் பகிர்ந்துகொள்ள உறவுகள் இல்லாத சோகத்தை அனுபவித்தால் மட்டுமே அறியலாம் .
                      ஆனால் அந்த சோகத்தை பூனாவில் துவங்கி அண்டார்க்டிக்கா  வரை கர்னல் பெற்ற வெற்றி பின் வாங்கச்செய்து
                                      தமிழரைத் தலை நிமிரச்  செய்துவிட்டன.
         களத்திலே மோதும் போருக்கு முன்பாக நிகழும் பலப் பல முன்னேற்பாடுகளே போரின் வெற்றியை நிர்ணயிக்கின்றன.ஆயுதங்களை விட ஆயத்தங்களே முக்கியம்.கர்னலின் பொறியாளர் பிரிவு செய்துமுடிக்கும் அந்த ஆயத்தங்களும் ,ஆக்கமும்,அழிவும் தான் நம்மவர் முன்னேறவும் ,எதிரிகள் பின்னடையவும் செய்யும் வெற்றியின் வித்துக்கள்.
                கர்னலின் இராணுவ அனுபவம் வேறொன்றையும் எடுத்துக்காட்டுகிறது .அதுதான் மொழி ஆதிக்கத்தை எதிர்க்கும் வேகத்தில் ஒரு மொழியை கற்கத்தவறிய ,அந்த மொழியை கற்க விரும்புவோருக்கும்  மறுக்கப்பட்ட ஒரு தலைமுறை ஏக இந்தியாவில் எத்தகைய புறக்கணிப்புகளையும்,பின்னடைவையும் பெரும் என்கிற செய்தி.விழித்துக்கொண்ட கான்வென்ட் தமிழர்கள் பதவி பெற்று வாழ அரசுப்பள்ளிகளில் அடித்தட்டுத் தமிழன் பலிக்கடாக்களாகத் தொடர்வது  இனியும் சரியா என்று மௌனமாகச் சிந்திக்கத் தூண்டுகிறார்  கணேசன்.
                     கான்ட்ராக்டர்களின் ஊழல் பிடியில் சிக்கிய பொதுப்பணித்துறையும் போக்கு வரத்துத் துறையும் நாட்டை ஆளும் பிரதமராலேயே கண்டிக்கப் பட்டன.கணேசன் போல இன்னும் எத்தனைபேர் இந்த ஊழல் முதலைகளுக்கு இரையாக வேண்டுமோ?நேர்மையற்ற தேசபக்தி போலித்தனத்திற்குப் போடும் வேழமே.
                        நமது  நாட்டின் வட கிழக்கு எல்லையிலும் தென்மேற்கு எல்லையிலும் போர்க்களத்தில் நின்ற கர்னலின் அனுபவம் பெரிதும் மாமன்னர் அசோகரின் உணர்வுகளை ஒத்ததாகவே  உள்ளது.கொலையே தேச பக்தி என்றும் வீரமென்றும் நியாயப்ப படுத்துகிறோம்.
                       மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் அநீதிக்காகப் போராடுகிறோம் என்று அறிந்தும் போர்க்களம் செல்லும் கும்பகர்ணர்களின் மன சாட்சியை உறங்கச்செய்யும் போதையே வீரம் என இலக்கியச் சான்று காட்டி கணேசன் வருந்துகிறார்.
                         மொழியால்,பண்பாட்டால்,வேறுபட்டு மக்களை மதத்தால் மட்டும் ஒன்றுபடுத்த முடியாது என்பதை டாக்கா குதிரைப் பந்தய மைதானத்தில் 93,000 பாகிஸ்தானியர் சரணடைந்த வேளையில்அசோகர் போல கணேசன் உணர்கிறார்.இதே நிலை இலங்கையிலும் உண்டாகக் கூடும் என்று எச்சரிக்கிறார்.இந்த சிந்தனை இந்தியத்தலைவர்களுக்கு  இயலாமற்போனது ஏன் ?
                       மொத்தத்தில் இராணுவம் போர் பற்றியெல்லாம் ஒரு க்வாக்கர் பார்வையுள்ள நான் ஒரு இராணுவ வீரரின் கடிதங்கள் சொல்லும் கதைகளைப் படித்து மன நிறைவு கொண்டேன்.
                       கரும் பச்சை சீருடையில் நல்ல தமிழ்ச்சொல்லாக்கம் இலக்கிய  மேற் கோள்கள் ஆழ்ந்த மன உணர்வுகள் என மொழி உணர்வு சுரக்கிறது .
                               கண்டத்தைச் சொல்லுகிறேன் -உங்கள் 
                              கதையைச் சொல்லுகிறேன் -இதைக் 
                              காணவும் கண்டு நானவும்  
                             காரணம் உண்டென்றால் 
                              அவமானம்  எமக்குண்டோ.?
          தூய விருப்பு வெறுப்பற்ற சாத்தியத்தேடலை கர்னல் கணேசன் துவக்கி யுள்ளார். இதில் விஞ்சி நிற்பது அன்பு,பாசம்,நேர்மை,மனித நேயம் .

                                          அவற்றை யார் வெல்ல முடியும்?                                                              .வெ .ஜீவானந்தம்.
                   சுமார் 160 பக்கங்கள் கொண்ட இந்த நூல் தாரிணி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
                  பிரதிகள் தேவைப்படுவோர் கர்னல் கணேசனை அணுகவும்.
                      தொ.பெ. 044-26163794
                     செல் :9444063794.






ஞாயிறு, 6 நவம்பர், 2016

                                 உங்களைச் சுற்றி ஒரு பூந்தோட்டம். 

                       அண்டை  மாநிலமான கர்நாடகாவில் உருவாகும் பொன்னி வள நதி காவிரி ஒரு காலத்தில் தனது செல்வங்களையெல்லாம் வாரி வழங்கியது தமிழ்நாட்டிற்குத்தான்.
                            கர்நாடகாவில் கிருஷ்ண ராஜ சாகர் அணை கட்டியபிறகும் அவர்களது பாசன பரப்பளவை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்த பிறகுதான் நதிநீர் பிரச்சினை பூதாகாரமாக உருவெடுத்து தமிழகத்தை  பாலைவனமாக ஆக்கிக்கொண்டிருக்கிறது.
                       விஞ்ஞான அறிவு மாபெரும் வளர்ச்சி பெற்றுள்ள இன்றைய நிலையில் பள்ளத்தை நோக்கி ஓடிவரும் நீரின் இயற்கைக் குணத்தை மக்கள் மாற்றியமைத்து மேடான பகுதிகளில் பாயுமாறு மாற்றினாலும் இயற்கை பொங்கி எழும்போது விஞ்ஞானம் வீழ்ச்சியடைவது தவிர்க்க முடியாது.
                    அப்படி பள்ளம் நோக்கிப்  பாய்ந்து வரும் காவேரி பல கிளைகளாகப் பிரிந்து தமிழ்நாட்டைக் குறுக்கிலும் நெடுக்கிலுமாகக் கடந்து பூம்புகார் என்ற காவிரிப்பூம்பட்டிணத்தில் கடலோடு கலக்கிறாள்.
                      தென் தமிழகத்தின் காவேரிக்கரையோரத்தில் பிறந்து வளர்ந்தவர்களில் பெரும்பான்மையோர் நுங்கும் நுரையுமாகப் பாய்ந்தோடும் புதுப்புனலில் நீராடி மகிழ்ந்தவர்கள் மட்டுமல்லாது வளம் செறிந்த தமிழ்மொழியிலும் மூழ்கி மூழ்கி முத்தெடுத்தவர்கள் என்பது சரித்திரம் சொல்லும் உண்மை 

Image result for River cauvery in tamilnadu


                    பழைய தஞ்சை மாவட்டத்தின் பெரு நகரங்களான தஞ்சாவூர் ,திருவாரூர் ,காவிரிப்பூம்பட்டிணம் போன்றவை வரலாற்றின் பல காலக்கட்டங்களில் சோழப்பேரரசின் தலை நகரங்களாக விளங்கியுள்ளன.
                              இந்த மண்ணில் வீரமும் விவேகமும் தேனும் பாலும் கலந்ததுபோல் ஒன்றுக்கொன்று உறுதுணைநின்று ,பல வீர விவேக காவியங்கள் உருவாக காரண மாக இருந்திருக்கின்றன.
                              பல்லவ மன்னன் நரசிம்கவர்மனிடம் படைத்தளபதியாக இருந்தவர் பரஞ்சோதி.வாதாபி போரில் சாளுக்கிய மன்னன் புலிகேசியை வெற்றிகொண்ட படைத்தளபதி பரஞ்சோதி ,பின்னர் சொந்த ஊர் திரும்பி தீவிர சிவதொண்டராகமாறி பிள்ளைக்கறி சமைத்த சிறுத்தொண்ட நாயனார் என்று புகழடைந்து பெயரும் புகழும் பெற்ற ஊர் திருச்செங்காட்டாங்குடி.
                     

Image result for thiruchenkattangudi siva temple

                 சோழநாட்டை ஆண்ட தலைசிறந்த மன்னர்களுள் ஒருவர் முதற்குலோத்துங்க சோழன்.அவரது அவைப்புலவர்களுள் ஒருவர் ஜெயங்கொண்டார்.குலோத்துங்க சோழனின் புகழ் மிக்க படைத்தலைவர்களுள் ஒருவர் கருணாகரத்தொண்டைமான். அவரின் பராக்கிரமப்  போர்களில் ஒன்று கலிங்கப் போர் .





                            கலிங்கப்போரின் பராக்கிரமங்களையும் வீரர்களின் தீவிர நாட்டுப்பற்றையும் தமிழுலகம் போற்ற தென் தமிழ்த் தெய்வப் பரணி என்று புகழ் பெற்ற கலிங்கத்துப்பரணி பாடிய புலவர் ஜெயங்கொண்டார்.இவர் பிறந்த ஊர் தீபங்குடி.
                          திருச்செங்காட்டங்குடி மற்றும் தீபங்குடி என்ற இரண்டு ஊர்களும் இன்றைய திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் தாலுக்காவில் உள்ளன.இரண்டு ஊர்களுக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 15,கி.மீ.வீரத்திற்கும் விவேகத்திற்கும் விளக்கம் அளிக்கக்கூடிய அந்த இரண்டு ஊர்களுக்கும் இடையில் உள்ள ஊர் சன்னாநல்லூர். 
                           சன்னாநல்லூரில் பிறந்து வளர்ந்து இராணுவ அதிகாரியான கர்னல் கணேசன் இந்தியத் திருநாட்டின் தென் துருவ ஆய்வு தளமான தக்ஷின்  கங்கோத்ரிக்குத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
                                  பலவிதமான மருத்துவ சோதனைகளுக்குப்பிறகு அவர்தான் தலைவர் என்று அறிவிக்கப்பட்டவுடன் சன்னாநல்லூர் வந்து தான் பிறந்து வளர்ந்த வீட்டின் கொல்லைப்புறத்திலிருந்து ஒரு பிடி மண் எடுத்துக்கொன்டுபோய்  தென் துருவம் சென்றவுடன் ஆய்வுத்தளத்தைச்சுற்றி தூவினார்.
                       சுமார் 480 நாட்கள் பணியாற்றி  திரும்புகையில் அங்கு சுமார் 50கோடி வருடங்களாக 5000மீ  காண பரிமாண உறைபனிக்கிடையில் கிடந்த சுமார் ஒருடன்  எடையுள்ள கற்பாறைகள் நாலைந்து எடுத்து வந்து தமிழகத்தின் சில இடங்களில் அகத்தூண்டுதல் பூங்கா அமைத்துள்ளார்.





              சன்னாநல்லூர்  அவர் பிறந்த ஊர் என்பதால் அங்கு அமைக்கப்பெறும் பூங்கா தனித்துவம் கொண்டதாக நூலகம்,தியானமண்டபம்,சிந்தனை அரங்கம்,மற்றும் உந்து சக்தி முகாம்கள் கொண்டதாக இருக்கும்.
                    பேரளம் வேதாத்திரி மகரிஷி "பெரு வெளி ஆலயத்தின்" தலைவர் டாக்டர்  அழகர் ராமானுஜம் அவர்களால் 23-12-2012 அன்று சன்னாநல்லூர் அகத்தூண்டுதல் பூங்கா திறந்து வைக்கப்பட்டது.



                        தமிழகம் கோவில்களின் மாநிலம் என்பது எல்லோரும் அறிந்ததே.கோவில்கள் இல்லாத ஊர்களையே தமிழகத்தில் பார்க்கமுடியாது.அப்படியிருக்க சன்னாநல்லூரைச்சுற்றி கோவில்கள் இல்லாமலிருக்குமா ?
                    அதனால்தான்" உங்களைச்சுற்றி  ஒரு பூந்தோட்டம் "என்று தலைப்பிட்டேன்.சன்னாநல்லூரைச்சுற்றி மிகப் பிரசித்திப்பெற்ற கோவில்கள் இருக்கின்றன.
                    அகத்தூண்டுதல் பூங்கா வளாகத்தில் வந்து தங்கி எல்லா இடங்களையும் சுற்றிப்பார்க்க வாருங்கள் என்று அன்போடு அழைக்கிறோம்.















வெள்ளி, 4 நவம்பர், 2016

                                        பார் என் மகனே !  பார் 

                    தாத்தா  பாட்டி என்று வயதானவர்களிடம் வளரும் குழந்தைகள் பெரும்பாலும் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் வளருவார்கள்.
                   ஆனால் பெற்றோர்களும் தாத்தா பாட்டியும் உடனிருக்கவேண்டும்.அப்பொழுதுதான் பெற்றோர்களின் கண்டிப்பும் பெரியோர்களின் மன்னிப்பும் ஒன்றுக்கொன்று ஈடுகொடுத்து குழந்தை நல்லவிதமாக வளரும்.
             
                                             பார் என் மகனே பார்
                                             பலர் உன் நிலையில் பார்.....பார்



                                             வியப்படையாதே
                                              விரிந்த  வானம்
                                              வளைந்துன்னைக்காக்குது பார் ....பார்




                                              பயப்படாதே  பாரினில் உன்போல்
                                               சரித்திரம் படைப்பதைப் பார் ......பார்.

முழுக்க முழுக்க வயதானவர்களிடம் வளரும் குழந்தைகள் கட்டுப்பாடு இல்லாமல் சுய நலமிகளாக வளர வாய்ப்புண்டு.எல்லாம் தனக்குத்தான் என்றும் எல்லோரும் தனக்காக வேலை செய்ய வேண்டும் என்றும் அவன் வளரலாம்.
                  பெரியார்  ஈ.வே.ரா. முழுக்க முழுக்க அவர் பாட்டியிடம் வளர்ந்தவர்.
மிகவும் வசதி படைத்த பெரும் பணக்கார குடும்பம்.ஈரோட்டில் புரட்சிகரமாக வாணிபத்திலும் சமூகப் பணியிலும் இருந்த அவரை அரசியலுக்கு இழுத்தவர் சேலத்தில் இருந்த சி.வி.ராஜகோபாலாச்சாரியார் தான்.
                     வளரும் குழந்தைகளுக்கு அன்பும் கண்டிப்பும் கால  நேரமறிந்து குழந்தைகளின் மனநிலையறிந்து வழங்க வேண்டும்.
                          ஒவ்வொரு குழந்தையும் அதன் கர்ம வினைகளுக்கேற்பவே  பிறப்பெடுக்கிறது.
                    .சம்பிரதாய முறையால் தந்தையாகப்பட்டவன் சுக்கிலப் பையினுள் ஒருகோடியே ஒன்பது லட்சத்து அறுபதினாயிரம் கணப்பொழுது  தங்கும் உயிர் அவனது கருணையினால் (காமமல்ல )சம்பிரதாய முறையால் தாயானவளின் சோணிதப்பையின்கண் வந்தடைகிறது.அங்கு ஆறுகோடியே நாற்பத்தெட்டு லட்ச கணப்பொழுது அவளது கருணையினாலும் கர்ம வினைகளினாலும் வளர்கிறது.
                     மாணிக்கவாசகரின் "போற்றித்திருவகவல்" திருவாசக வரிகள் இங்கு குறிப்பிடத்தக்கது.
                             மனுடப்பிறப்பினுள் மாதா  உதிரத்து
                             ஈனம் இல் கிருமிச் செருவினுள் பிழைத்தும்
                             ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
                              இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
                             மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
                             ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்
                              அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
                               ஆறு திங்களில் ஊறு  அலர் பிழைத்தும்
                              ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
                               எட்டு திங்களில் கட்டமும் பிழைத்தும்
                               ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
                               தக்க தசமதி தாயொடு தான்படும்
                              துக்க சாகரம் துயரிடைப்  பிழைத்தும் .....
            இப்படி எண்ணற்ற துன்பங்களிலெல்லாம் பிழைத்து தெய்வம் என்னும் சித்தம் உண்டாகும்போது  அவன் நல்வாழ்வு வாழ முற்படுகிறான் .      
                                வாலிப வயது வரை தாத்தா பாட்டியுடனிருக்கும் குழந்தைகள் பேரதிர்ழ்ட்டசாலிகள்.ஆகா ! எது செய்தாலும் தவறு இல்லை என்னும் தாத்தா பாட்டியுடன் கொஞ்சிக்குலாவி வளர்ந்தவர்கள் எப்படி மாறுவார்கள் என்பதை யாராலும் கணிக்க முடியாது.
                                     காலம் தான் அவர்களை அறிமுகப்ப படுத்தவேண்டும் .
        தாத்தா பாட்டியின் 80தாவது வயது பூர்த்தியும் ஆயிரம் பிறை கண்டவர்கள்  என்ற விழாவையும் காணும் பேரக்குழந்தைகளின் பூரிப்பு மற்றவர்களுக்கு கிடைக்காத அனுபவம்.




                                                                வாழ்க வளமுடன்.