புதன், 21 பிப்ரவரி, 2018


                                இராணுவத்தில் வீர விளையாட்டுகள்.
                              ( Adventure sports in the Army)
    இராணுவம் ஒரு பன்முகப் பரிமாணம் உள்ள அமைப்பு..இராணுவம் என்றதும் துப்பாக்கி ஏந்தி போரிடுவதுதான் அவர்களது வேலை என்றுதான் பரவலாக நம்பப்படுகிறது.
                   உடலளவிலும் மனதளவிலும் ஒரு இளைஞனை தயார்படுத்திய பிறகு அவனுக்குப் போர்க்களப்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. சுமார் ஒன்றரை வருடங்கள் போல் ஆரம்பகாலப் பயிற்சிகள் முடிந்தபிறகு அவர்கள் படைப்பிரிவுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்.அதிகாரிகளும் அதிகாரிகளல்லாதோரும் ஆரம்பகாலப் பயிற்சிகளை தனித்தனியாக செய்திருந்தாலும் மீதமுள்ள வாழ்க்கை முழுவதும் அவர்கள் இணைந்தே பணியாற்றுகிறார்கள்.
                  உலகில் உள்ள எல்லா விளையாட்டுகளும் இராணுவத்திலும் உள்ளன.இதில் சிறப்பாக உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் சிறப்புப்பயிற்சியளிக்கப்படுகிறது. இவர்கள் இந்தியத்திருநாட்டின் பிரதிநிதிகளாக உலக விளையாட்டு அரங்கங்களான ஒலிம்பிக் ,ஆசிய விளையாட்டுப்போட்டி போன்றவைகளில் பங்கு கொண்டு நாட்டுக்கும் தங்களுக்கும் தாங்கள்  சார்ந்த படைப்பிரிவிற்கும் பெருமை சேர்க்கிறார்கள்.
          இவைகள் தவிர வீர விளையாட்டுகளும் இருக்கின்றன.உதாரணமாக ;

       1.)பாராசூட்டிலிருந்து குதிப்பது.
          Para jumping.

 



       2)பாராசூட் பயிற்சியில்லாதவரும் விண்ணில் பறப்பது.
         Para sailing/Glaiding

       3)மலை ஏறுதல் 
          Mountaineering.

       4)  ஆழ் கடலில் நீந்துதல்.
              Ocean swimming.

        5)ஆழ் கடல் பாய்மரப்  படகுப் பயணம்.
          Deep sea sailing.

        6)தென் துருவ ஆய்வுப் பணி .
                 Antarctic Expeditions

 

         7)ஐக்கிய நாட்டு அமைதிப்பணி.
                 United Nations Peace Keeping Force.

         8)பனி,மற்றும் பனிப்புயல் ஆய்வுகள்.
              Snow and Avalanches Study 
.
         9)விண்ணிலிருந்து பாய்வது.
               Sky Diving

         10)ஆழ்கடல்  மூழ்குதல் 
               Deep Sea Diving

     உலகம் சுற்றிய  பாய் மரப் படகு பயணமாக சில ஆண்டுகளுக்குமுன் இராணுவத்தின் பொறியாளர் படைப்பிரிவைச்சேர்ந்த அதிகாரிகள் சுமார் ஒரு வருடம் போல் கடலில் பயணித்து சாதனை நிகழ்த்தினார்கள்.
               இப்பொழுது இந்திய கடற்படை மகளிர் அதிகாரிகள் ஆறு பேர் அது போன்ற உலகம் சுற்றும் கடற்பயணத்தில் சென்று கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் அநேகமாக வரும் மார்ச் மாதம் பயணத்தை முடிப்பார்கள்.
           உறை  பனி கண்டம் என்று சொல்லக்கூடிய அண்டார்க்டிக்காவில் இந்தியா ஆய்வுத்தளம் அமைத்து உலக நாடுகளுக்கு இணையாக ஆய்வுகள் நடத்தி வருகிறது.உலகிலேயே கொடுமையான குளிரும் (-90*c) வருடம் முழுவதும் வீசும் பனிக்காற்றும் அதிகபட்சமாக 350Km/hr  நிரம்பிய இடமது.ஒவ்வொரு குளிர்காலக்குழுவும் ஒன்றரை வருடங்கள் அங்கு தங்கி ஆய்வுப்பணியும் பராமரிப்புப் பணிகளும் செய்து திரும்புகின்றன.
              இப்படிப்பட்ட குழுவுக்கு தலைவராக கர்னல் கணேசன் என்ற பொறியாளர் படைப்பிரிவு அதிகாரி தேர்வு செய்யப்பட்டார்.பலவிதமான மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு இவர்தான் தலைவர் என்று அறிவித்தபிறகு தனது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூர்  சென்று தான் பிறந்த மண்ணை ஒருபிடி எடுத்துக்கொண்டார்.
                      இந்த தாய் நாட்டு மண் இந்தியத் தென் துருவ  ஆய்வுத்தளமான தக்ஷிண் கங்கோத்திரி சுற்றி தூவி தனது பணியை ஆரம்பித்தார்.உலக அளவில் பாராட்டும்படி தனது பணியை முடித்து ஒன்றரை வருடங்கள் முடிந்து திரும்புகையில் அங்கிருந்து சுமார் ஒரு டன்  எடையுள்ள கற்பாறைகள் சிலவற்றை தமிழகம் கொண்டுவந்தார்.
                       இந்த கற்பாறைகள் சுமார் பத்து அடி  உயர கான்கிரீட் தூண்கள் மீது நிறுத்தப்பட்டு "அகத்தூண்டுதல் பூங்கா "என்று பெயரிடப்பட்டுள்ளது.   
                      அவ்வப்பொழுது மனவள பயிற்சி ,உந்துசக்தி முகாம் ,யோகா போன்ற பயிற்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.ஒரு அருங்காட்சியகமும் மன  வள நூல்கள் நிறைந்த ஒரு நூலகமும் இருக்கின்றன.பயிற்சி  காலத்தில் இலவச சிற்றுண்டியும் வழங்கப்படுகின்றது.
                   வாழ்வில் முன்னேறவேண்டும்,சாதனைகள் புரியவேண்டும் என்ற ஆர்வமுள்ள இளைஞர்கள் இளம் பெண்கள் பயிற்சிக்கு வரலாம்.
                  பயிற்சி முற்றிலும் இலவசம் என்பதுடன் சிறப்பானப் பயிற்சியாளர்களுக்கு ஊக்கத்தொகையும் மேலும்  சாதனைகள் புரிய வழிகாட்டுதலும் கொடுக்கப்படுமின்றன.